
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் காஜாங் உலுலங்காட் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தாமான் நண்டிங்ஸ் பகுதி முற்றாக பாதிக்கப்பட்டு இருப்பதால் இங்கு வாழும் 50 இந்திய குடும்பங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரிதவிக்கின்றன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கெஅடிலான், பக்கத்தான் ஹரப்பான் மற்றும் தொண்டூழிய நிறுவனங்கள் உதவிகள் வழங்கியுள்ள வேளையில் தற்போது வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் இறங்கியுள்ளார். கெஅடிலான் கட்சி தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக களத்தில் இறங்கி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். மேலும் கட்சி மற்றும் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் உதவி பொருட்களையும் வழங்கி வருகிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தாமான் நண்டிங்ஸ் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார். உலு லங்காட் தொகுதி கெஅடிலான் தலைவர் இராஜன் முனுசாமி தலைமையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கெஅடிலான் உறுப்பினர்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பினாங்கு பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் கைரூடின், உலுலங்காட் கெஅடிலான் இளைஞர் பிரிவைச் சேர்ந்த விஷ்ணு,காஜாங் கவுன்சிலர் ராமச்சந்திரன் ஆகியோரும் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏழு மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனம் மதம் நிறம் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து உதவி வரும் காட்சிகள் பார்த்து பெருமிதம் கொள்கிறேன் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
