
மலேசிய நாட்டில் தமிழ் மற்றும் சீன தாய்மொழி ஆரம்பப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மலேசியாவில் தேசிய மொழியாகவும் அதிகாரப்பூர்வ மொழியாகவும் மலாய் மொழி இருந்தபோதிலும் தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளில் தமிழும்,மாண்டரின் மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்பவே தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் செயல்படுவதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக மூன்று மலாய் அமைப்புகள் தொடுத்திருந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் தமது தீர்ப்பில் அறிவித்தார். தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட வேண்டுமென தீபகற்ப மலாய் மாணவர்கள் சம்மேளனம்,மலாய் கல்வி மேம்பாட்டு மன்றம்,மலாய் எழுத்தாளர் சம்மேளமான கபேனா ஆகியவை அந்த வழக்கை தொடுத்திருந்தன. இந்த வழக்கு முடிவை தள்ளுபடி செய்வதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் அதிரடியாக அறிவித்தார்.
