
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களின் வெற்றியையும் உறுதி செய்ய அமானா கட்சியின் இயந்திரமும் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபு வலியுறுத்தியுள்ளார்.
ஜொகூர் அமானா தேர்தல் இயந்திரத்தை நேற்று இரவு தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், வேட்பாளர் அமானா, ஜசெக அல்லது கெஅடிலான் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களின் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டியது கடமை என்று கூறினார். “ஒருவர் வென்றால் அனைவரும் வெல்வோம். நமது கட்சிக்காக மட்டுமே உழைத்து, கூட்டணிக் கட்சிகளை தனியே விட்டுவிடும் அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
அமானா மற்றும் கெஅடிலான் இடையே புதேரி வாங்சா தொகுதியைச் சுற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் முகமட் சாபுவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் மூடாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்தத் தொகுதியை மீண்டும் பெற விருப்பம் இருப்பதாக அமானா தெரிவித்திருந்தது. இருப்பினும், அந்தத் தொகுதியில் கெஅடிலான் போட்டியிடும் என ஜொகூர் கெஅடிலான் துணைத் தலைவர் ஜிம்மி புவா கூறியிருந்தார்.
இதனிடையே, தொகுதி பங்கீடு தொடர்பான எந்த முடிவையும் அமானா ஏற்றுக்கொள்ளும் என அதன் பொதுச் செயலாளர் பைஸ் பட்சில் தெரிவித்துள்ளார். கூட்டணிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் அனைத்தும் வரும் திங்கட்கிழமை தீர்க்கப்படும் என்றும், அன்றைய தினம் நம்பிக்கை கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார் என்றும் முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



