
பொருளாதார சிக்கல், இயற்கைப் பேரிடர் நேரும்பொழுதெல்லாம் பணத்தை மீட்பது என்றால், இபிஎஃப் ஒன்றும் பேரிடர் கால நிதி அல்லவென்று அந்த ஊழியர் நல நிதியகத்தின் சார்பில் அழுத்தமான தொனியில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேக் கருத்தைதான் நிதி அமைச்சர் தெங்கு ஸப்ரூலும் அண்மையில் வலியுறுத்தி இருந்தார். தவிர இபிஎஃப் நிதி, அதற்காக வரையறுக்கப்பட்ட அளவைமீறி குறைந்தால் அது தொழில்-வர்த்தக-முதலீட்டு வாய்ப்புகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருந்தார். இதைத் தொடர்ந்துதான் நிதி அமைச்சருக்கு பொதுமக்கள் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளனர். உணவு, உறைவிடம் உள்ளிட்ட வாழ்க்கைச் சூழல் சிக்கலாக இருக்கும்பொழுது, நிதி அமைச்சர் இவ்வாறு பேசலாமா என்று சாடுகின்றனர்.
