
கொடை மனம் கொண்டோர் இந்த பூமியில் காலமெல்லாம் வாழ்ந்துள்ளனர். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது; வலியவர்கள் எளியவர்களை அரவணைப்பது போன்ற சமூக நோக்கு பண்பு நலன்கள் யாவும் வள்ளுவர் வகுத்த ஈதல், இசைபட வாழ்தல் என்பதற்கான சான்றாகும். அந்த வகையில் தமிழகம், அருப்புக்கோட்டை அருகே பண்ணை மூன்றடைப்பு என்ற கிராமத்தில் 17-ஆம் நூற்றாண்டு நாயக்கர் ஆட்சி கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை நம்பி என்பாருக்கு அங்குசெட்டி என்பார் தன் நிலத்தின் ஒரு பகுதியை தானமாக எழுதிக் கொடுத்த 11 வரித் தகவலைத் தாங்கிய கல்வெட்டு அது. சூலாயுதமும் அட்டமங்கல அடையாளமான ஸ்வஸ்திக் சின்னமும் பொறிக்கப்பட்ட இரண்டரை அடி உயரமும் ஒன்றேகால் அடி அகலமும் கொண்ட அக்கல்வெட்டை, அருப்புக்கோட்டை எஸ்பிகே கலைக்கல்லூரி வரலாற்றுப் பேராசியர் ரெ.விஜயாராகவன், அவரின் மாணவர்கள் கொண்ட குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
