
கோவிட்-19 தொடர்பில் ‘தைப்பூச திரள்’ ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முனைப்பில் அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான நிருவாகமும் ஒற்றுமை அமைச்சும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் தைப்பூச விழா தொடர்பில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை முன்கூட்டியே நிறைவேற்றி வருகின்றனர். இதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் பத்துமலையில் அதிகமானவர்கள் கூடினர். முகக்கவசம் அணியாமலும் உறுமிமேளம் இசைத்தபடி நெருக்கமாகவும் மக்கள் கூடியுள்ளனர். கூடிய பக்தர்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதால் தேவஸ்தான நிருவாகத்திற்கு எதிராக குற்றப்பதிவு வெளியிடப்பட்டு ஆயிர வெள்ளி தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. காவல் துறை கோம்பாக் மாவட்டத் தலைவர் ஜைனால் முகமட் இதை உறுதிப்படுத்தினார்.
