
மேநாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் அரசியல் பயணத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஊழல், நம்பிக்கை மோசடி, பண மோசடி உட்பட அவர்மீது சுமத்தப்பட்ட 47 குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக அரச வழக்கறிஞர் தரப்பு நிரூபித்துள்ளதால், ஜாஹிட் ஹமிட் தன் மீதான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று இன்று காலையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கொலின் லோரன்ஸ் செக்குவேரா தீர்ப்பு வழங்கி உள்ளார். ஜாஹிடி ஹமிடி மீதான வழக்கு தொடர்பில் அவர் விடுவிக்கப்படுவாரா அல்லது வழக்கு உறுதி செய்யப்படுமா என்பது குறித்து இன்று தீர்ப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியானதில் இருந்தே நாட்டில் அரசியல் வட்டத்தில் பரபரப்பு நிலவியது. தேசிய முன்னணி ஆட்சியின் பிரதமர் நீதிமன்ற படிக்கட்டுகளில் நிற்கும் நிலைக்கு ஆளாகி இருப்பதைப் போல, துணைப் பிரதமரும் உள்ளாகி இருப்பது, அம்னோ வலிந்து முனைப்பு காட்டும் 15-ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ-விற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
