
ஆசியக் கண்டத்தைப் பொறுத்தவரை ஜனவரி 26-ஆம் நாளான இன்று, இந்தியா தன் குடியரசு தினத்தை 73-ஆவது தடவையாக கொண்டாடுகிறது. இதைத் தவிர பொதுவாக 26-ஆம் நாளுக்கும் இந்தப் புவிப் பந்துக்கும் ஏதோவொரு பந்தம் தொடர்கிறது; அது என்ன உறவு, எப்படிப்பட்ட நெருக்கம் என்பதுதான் இன்றுவரை தெரியவில்லை. புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சிந்தனையை வண்டைப் போல குடைந்து கொண்டிருக்கும் ஒரு சங்கதி, 26-ஆம் நாளுக்கும் நிலமும் நீரும் இணைந்த இந்த பூமிக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றியதுதான். இந்த உலகில் இதுவரை நிகழ்ந்த நிலநடுக்கம், கடலுக்குள் எரிமலை வெடிப்பது, ஆழிப் பேரலை பொங்கி எழுவது என பெரும்பாலான இயற்கைப் பேரிடர்கள் 26-ஆம் நாளில்தான் நடைபெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக, பிப்ரவரி 26-இலும் டிசம்பர் 26-ஆம் நாளிலுமே இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் இப்படி 26-ஆம் நாளில் மட்டும் அதிகமாக நடைபெறுகின்றன என்பதற்கான விடை இதுவரை யாருக்கும் புரியவில்லை. இத்தகைய புவியியல் விந்தைகள் ஒருபுறம் இருக்க, இன்றைய ஜனவரி 26-ஆம் நாளுக்கு இன்னொரு வரலாற்றுச் சுவடு உண்டு. கடைசி இந்துப் பேரரசு முஸ்லிம் சுல்தான்களின் கூட்டுப் படையிடம் தோற்று சரிந்த நாள் ஜனவரி 26. இந்தியா என்ற நாட்டை ஆங்கிலேயர்கள் கட்டமைக்கும்முன், மொகலாய சாம்ராஜியம் அந்த மண்ணில் பரந்து விரிந்திருந்தது. இதில் விஜய நகர பேரரசுக்கும் தக்காண பீடபூமி சுல்தான்களுக்கும் நடந்த போரை முக்கியமானப் புள்ளியாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். காரணம், அந்தப் போரில்தான் கடைசி இந்தப் பேரரசாக விளங்கிய விஜய நகரப் பேரரசு வீழ்ந்தது. அதற்குப் பின்னர்தான், இந்தியா முழுவதும் மொகலாய சாம்ராஜியம் ஏகமாக விரிவடைந்தது. அந்தப்போர் முடிவுக்கு வந்த நாள், 1565ஆம் ஆண்டில் இதே ஜனவரி 26-இல்.
