
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த படிப்படியாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இதற்கிடையே வைகாசி மாதம் என்பதால் பல்வேறு முகூர்த்த நாட்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மணமக்களின் பெற்றோர்கள் நிச்சயம் செய்திருந்தனர். இதற்காக மண்டபங்கள் மற்றும் கோவில்களில் பதிவு செய்து இருந்தனர். குறிப்பாக இன்று (திங்கட்கிழமை) ஏராளமான திருமணங்கள் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்று நடைபெற இருந்த திருமணங்கள் ஒரு நாள் முன்னதாக, அதாவது நேற்றே நடைபெற்றது. இதுதொடர்பாக மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இருந்தனர். நெல்லையில் சந்திப்பு சாலைக்குமார சுவாமி கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் முன்பு நேற்று ஏராளமான திருமணங்கள் எளிமையாக நடைபெற்றன.
கோவில்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில்கள் முன்பு நின்று கடவுளை வழிபட்டு மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். ஒரு சிலர் தங்களது வீடுகளிலேயே எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்தனர்.
இதுதவிர இந்த வாரத்தில் பல்வேறு தேதிகளில் நடத்த இருந்த ஒருசில திருமணங்களும் நேற்றே நடைபெற்றது.
