
ஜோகூர் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த பெரும்பான்மை வெற்றி மற்ற கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்பி யாக்கோப் தெரிவித்துள்ளார். ஜோகூர் தேர்தலுக்குப் பிறகு முதலாவது அமைச்சரவைக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது; அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன்களுக்காக விவேகமாக செயல்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நிபுணத்துவ முறையில் நாட்டின் கொள்கை குறித்து நாங்கள் அனைவரும் ஒன்றாக விவாதித்து முடிவு எடுப்போம். வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக நாங்கள் இருப்பதால் எங்களுக்குள் பிணக்கு ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் கூறினார்.
