
தேசந் தந்தை துங்கு அப்துல் ரகுமான் முதல் 2-ஆவது கொல்லைப்புற ஆட்சியின் தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் வரை நாட்டின் அனைத்து பிரதமர்களுடனும் அரசியல் புரிந்த பெருந்தலைவர் லிம் கிட் சியாங், தன்னுடைய அரசியல் பயணத்திற்கு நேற்று நிறைவுரை எழுதினார்.
சந்தர்ப்பவாதம், சுயநல அரசியல் இரண்டுக்கும் எதிராக காலமெல்லாம் எதிர்நீச்சல் போட்டவரும் கரைபடாத கரத்திற்கு சொந்தக்காரருமான 82 வயது லிம் கிட் சியாங்கின் முன்னோர்கள் சீனாவின் ஃபூஜியான் மாகாணம் ஸங்சௌவ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
2008 பொதுத் தேர்தல் களத்தில் மக்கள் சக்தி என்னும் சொற்றொடரை அதிகமாகப் பயன்படுத்திய சீனத்தலைவரான இவர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், ஜசெக-வின் தேசியப் பொறுப்பு என்றெல்லாம் அரை நூற்றாண்டுக்கும் மேலான தீவிர அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக, இவர் ஒரு பத்திரிகையாளர். கட்சி இதழான ரோக்கெட்டை நீண்ட காலத்திற்கு வழிநடத்தினார். கட்சியின் 17-ஆவது பொதுப்பேரவை நடைபெற்ற நேற்று, தன்னுடைய அரசியல் விலகலை அறிவித்தார்.
