
துணைப் பிரதமர் நியமனம் மீதான உடன்பாடு காணப்பட்டிருந்தது உண்மைதான் என பெர்சாத்து (Bersatu) கட்சித் தலைவர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின் கூறியிருக்கின்றார். அவ்வுடன்பாடு கையெழுத்தான போது பாஸ் கட்சியும் உடனிருந்தது.
பெரிக்காத்தான் நேஷனல் (Perikatan Nasional) கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தாமும், பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் (Hamzah Zainudin)னும் அவ்வுடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தோம்.
இப்படியோர் உடன்பாடு இருந்தது பெரிக்காத்தான் நேஷனலின் அனைத்து தலைவர்களுக்கும் தெரியும் என முஹிதீன் கூறினார். துணைப் பிரதமர் நியமனம் தொடர்பில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் எந்த உடன்பாடும் காணப்படவில்லை என பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹடி அவாங் கூறியிருப்பது தமக்கே வியப்பாக இருப்பதாக முஹிதீன் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் தாங்கள் கோருவது எல்லாமே, உடன்பாட்டில் உள்ள விஷயங்கள் தானே தவிர, கூடுதலாக எதையும் தாங்கள் கோரவில்லை என முஹிதீன் சொன்னார்.
இதனிடையே 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, மேம்படுத்தப்பட்ட புதிய சின்னத்தைப் பயன்படுத்தக்கூடும். இரு வாரங்களுக்கு முன்பு நடந்த உச்சமன்றக் கூட்டத்தில் இப்பரிந்துரை விவாதிக்கப்பட்டது. ஹம்சா சைனுடின் இப்பரிந்துரையை மேலும் விரிவாக ஆராய்ந்து வருவதாக முஹிதீன் மேலும் விவரித்தார்.
