
ஈகைத் திருநாளை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று கிளந்தானில் உள்ள எல்லா கடைகளையும் மூடும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டது அதிகாரத் துஷ்பிரயோகம் என்று வர்ணிக்கப்படுகிறது.
அன்றைய தினம் அங்குள்ள அனைத்து மக்களும் தொழுகையில் கலந்து கொள்ளும் வகையில் பேரங்காடிகள் உட்பட எல்லாக் கடைகளையும் மூட வேண்டும் என்று அரசு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது.
அது பற்றி கடுமையாக விமர்சித்துள்ள பாயிட் அல்-அமானா எனும் அரசு சாரா இயக்கத்தின் தோற்றுநர் அப்துல் ரசாக் அமாட் பண்டிகையின்போது, தொழில்கள் இயங்குவதால் நட்டம் எதுவும் இல்லை என்றும் மாநில அரசின் செயல்பாடு குழப்பமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இஸ்லாம் சமயம் நல்லிணக்கத்தையும் கடின உழைப்பையும் வர்த்தகம் போன்றவற்றில் பெரிதும் ஊக்குவிப்பு தருவதாகவும் அது பண்டிகையின்போது கடைகளை மூட சொன்னதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்துறைகள் திருநாளை தடுத்தது இல்லை என்றும் தனிப்பட்ட வர்த்தகங்களைச் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தச் செயலானது இஸ்லாம் அல்லாதோரின் வர்த்தகத்திற்கு தீங்கு இழைப்பதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
