
முன்னாள் குற்றப் புலனாய்வு இயக்குனர் Amar Singh Kishar Singh (அமார் சிங் கிஷார் சிங்) என்பவரைக் கடுமையாக விமர்சித்து அவதூறு பரப்பிய இணையதள எழுத்தாளர் Raja Petra Kamarudin மீது விசாரணை நடத்த கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு நஜிப் ரசாக் வீட்டில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டபோது, அமார் சிங் தனது காதலியோடு அங்கு இருந்ததாக ராஜா பெத்ரா தமது இணையதளத்தில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார் . இது சம்பந்தமான புகாரைத் தாம் பெற்றிருப்பதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் நூர் டெலிஹான் யஹாயா குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தியை அடுத்து, அமார் சிங் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை என்றும் ராஜா பெத்ராவின் குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும் ஆதாரம் இல்லாதது என்பதால் அது தம்மைக் களங்கப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
