
மக்களவையில் அநாகரீகமாகவும் பாலியல் ரீதியாகவும் கேலி பேசும் எம்பிக்களுக்கு ரிம. 500 அபராதம் விதிக்க வேண்டுமென பத்து காவான் எம்பி கஸ்தூரி பட்டு வலியுறுத்தியுள்ளார்.
ஒரு சில எம்பிக்கள் அடாவடித் தனமாக மற்றவர்களைக் கேலி பேசி, மனம் நோக வைப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு மக்களவை தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
ஒரு சமயம் பாலிங் எம்பி அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம், தம்மைப் பார்த்து மிகவும் கருப்பாக இருப்பதாகவும், அவைக்கு வரும்போது, முகப் பவுடர் பூசி வர வேண்டுமென்றும் ஏளனமாகப் பேசி வருந்தச் செய்ததாகவும் கஸ்தூரி குறிப்பிட்டார்.
அண்மையில் கூட, பாசிர் சாலாக் எம்பி தாஜுடின் அப்துல் ரஹ்மான் எதிர்க்கட்சிப் பெண் எம்பிக்களை வசை பாடி, அவர்கள் முரட்டுத் தனமாகவும் அநாகரீகமாகவும் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டி, அனைவரையும் தலை குனிய வைத்ததாகக் கஸ்தூரி குறிப்பிட்டார்.
