
மலேசிய இந்து சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிருவாகக் குழு சார்பில் டத்தோ மோகன் சண்முகம் தரப்பினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு கடந்த புதன் கிழமை செப்டம்பர் 28-இல் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு மீண்டும் அக்டோபர் 11-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையில், மோகன் சண்முகம்தான் அக்டோபர் 11-வரை இடைக்காலத் தலைவர் என்றும் இதை மாநில மற்றும் வட்டாரப் பேரவைகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது.
மலேசிய இந்து சங்கத்திற்கு மோகன் சண்முகம் இடைக்கால நிருவாகியோ அல்லது இடைக்காலத் தலைவரோ கிடையாது என்று மலேசிய இந்து சமூகத்திற்கும் இந்து சங்க உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புவதாக ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
2022 ஜூலை 24-இல் நடைபெற்ற மலேசிய இந்து சங்க 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தின்போது தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த டத்தோ மோகன் சண்முகம், அதேக் கூட்டத்தில் பதவி விலகியதுடன் மத்திய செயலவையில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். ஆனாலும், அவர் மீண்டும் தலைவர் என்று சொல்லிக் கொண்டு இந்து சங்க தலைமையகத்தை ஆக்கிரமிக்க முயன்றதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு மோகன் சண்முகமும் மற்ற நால்வரும் தொடர்ந்த தடை வழக்கு ஆகியவை கடந்த புதன் கிழமை, செப்டம்பர் 28-இல் விசாரணைக்கு வர இருந்த நிலையில், மோகன் சண்முகம் தரப்பு தொடர்ந்த தடை ஆணை வழக்கு முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் தொடர்பில் வாதிகள் மற்றும் பிரதிவாதிகளான மோகன் சண்முகம் மற்றும் நால்வர் தரப்பு வாதங்களை நீதித் துறை ஆணையர் வான் முகமட் அமின் பின் வான் யாஹ்யா செவிமடுத்தபின், இதற்கான தீர்ப்பை வரும் அக்டோபர் 11-இல் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
அதுவரை இந்து சங்க புதிய நிருவாகத் தரப்பினரான தங்க. கணேசன் உள்ளிட்ட வாதிகள் தரப்பினரின் கோரிக்கை நிலுவையில் இருக்கும் என்றுதான் நீதித் துறை ஆணையர் வான் முகமட் அமின் பின் வான் யாஹ்யா தெரிவித்துள்ளார்.
தவிர, மோகன் சண்முகம் தரப்பினர் ஜூலை 31 மற்றும் ஆக்ஸ்ட் 6-இல் கூட்டிய கூட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அவரும் அவரின் தரப்பினரும் எந்த நிருவாக முடிவும் எடுக்கக்கூடாது; எந்தக் கூட்டத்தையும் கூட்ட முடியாது; புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிருவாகிகள் இந்து சங்க அலுவலகத்தை பயன்படுத்தலாம் என்று ஆக்ஸ்ட் 9-இல் அறிவித்த உத்தரவு தொடர்கிறது என்று மேலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் புதிய கௌரவச் செயலாளர் கே. மாணிக்கவாசகம் உள்ளிட்ட அனைத்து புதிய நிருவாகிகள் குறித்த முடிவு அக்டோபர் 11-இல் தெரியவரும் என்றும் இதற்கிடையில் தடை விதிக்கப்பட்டுள்ள மோகன் சண்முகம் இடைக்காலத் தலைவர் என்ற வகையில் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்வது உண்மைக்கு மாறானது என்றும் நீதிமன்ற உத்தரவை மீறியது என்றும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க. கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
