
பக்காத்தான் ஹராப்பானின் ஆளுகையின் கீழ் இருக்கும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாண்டு தேர்தலை நடத்தினால், கூட்டணிக்குப் பாதிப்பு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், தேசிய முன்னணி நிதி வளத்தோடும், சிறப்பான தேர்தல் இயந்திரத்தோடும் அடிமட்டத் தொண்டர்களின் பெரிய பலத்தோடும் இருப்பதால், அது எதையும் சாதித்து வெற்றியை அடைய பன்மடங்கு முனையும் என நம்பலாம்.
மாநிலத் தேர்தல்களைத் தனியாக நடத்தினால், தேசிய முன்னணியின் பணபலம் அந்த மாநிலங்களில் ஆறாக ஓடி, தேசிய முன்னணியின் தொண்டர்கள் புயலாய் செயலாற்றி வெற்றியைச் சாதகமாக்கத் தயங்க மாட்டார்கள் என்று பிகேஆரின் சில தலைவர்களே கருத்து கூறுகின்றனர்.
பாஸ் கட்சி தனது ஆட்சியின் கீழ் இருக்கும் கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலத் தேர்தல்களைப் பக்காத்தானோடு இணைந்து அடுத்தாண்டு நடத்தினால், அப்போது தேசிய முன்னணியின் தாக்கமும் பலமும் குறையும் என்றும் அதே தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
