
1எம்டிபி நிதி மோசடிக்கு சூத்திரதாரியாக விளங்கும், ஓடி ஒளிந்து வாழும் ஜோ லோ சீனாவில் 333 மில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டிஸ் வெர்ஜின் தீவில் பதிவு செய்யப்பட்ட கிரேஸ் ஸெனித் நிறுவனத்தை ஜோ லோ ஷாங்காய் உலக நிதி மையத்தில் நடத்தி வருவதாக 1எம்டிபி நிதி மோசடி பற்றிய ‘The Billion Dollar Whale’ எனும் புத்தகத்தை எழுதியிருக்கும் Bradley Hope (பிரேட்லி ஹோப்) குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சீன அரசாங்கத்தின் அனுமதியோடுதான் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஜோ லோ மலேசியாவினால் தேடப்படும் நபராக இருக்கும்போது, அவரை மலேசியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்காதது சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது.
அது பற்றிக் குறிப்பிட்ட சட்டத் துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபார், ஜோ லோவை கைது செய்யாமல் இருப்பதற்கு அரசைக் குறை சொல்லக்கூடாது என்றும் குற்றவாளியை நாடு கடத்த மலேசியா சீனாவுடன் எந்த ஒப்பந்தத்தையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
