
15ஆவது பொதுத்தேர்தலின் போது மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால், ஷா ஆலம், தாமான் ஸ்ரீமூடா மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்று எச்சரித்துள்ளனர்.
2021 டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் ஸ்ரீமூடா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சில பகுதிகளில் வெள்ளம் வீட்டின் கூரை வரை உயர்ந்து அபாயத்தை உருவாக்கி இருந்தது. அதில் 50 பேர் வரை மரணமடைந்தனர். வீடுகளும் வாகனங்களும் கடுமையாகப் பாதிப்படைந்தன. பல கோடி ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
எல்லா தரப்பு மக்களும் கடுமையான இழப்புக்கு ஆளாகினர். பலர் இன்னமும் அந்த துயரிலிருந்தும் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
அங்கு கன மழை பெய்தால், வெள்ளம் வரும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். வெள்ள காலத்தில் தங்களின் குடும்பத்தின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியமென்றும், தேர்தல் துச்சமென்றும் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ள அபாயம் இருக்கும்போது, அங்கு குடியிருக்கும் வெளி மாநில மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
