
வரும் பொதுத்தேர்தலில் கிள்ளான் தொகுதி எம்பியான சார்ல்ஸ் சந்தியாகோவுக்குப் பதிலாக வேறொருவரை அங்கு நிறுத்த ஜசெக திட்டமிடுவதால், நேற்று முன்தினம் 14 இந்திய அரசு சாரா இயக்கத்தினர் ஒன்று கூடி, அத்தொகுதியில் சந்தியாகோ நான்காவது முறையாகப் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென அறைகூவல் விடுத்தனர்.
கிள்ளான் லிட்டல் இந்தியா தொழில் முனைவோர் தலைவர் சார்ல்ஸ் மாணிக்கம் கூறும்போது, சந்தியாகோ இத்தொகுதியில் அளப்பரிய சேவையை வழங்கி வந்துள்ளதாகவும் கோவிட் காலத்திலும் கடந்தாண்டு வெள்ள காலத்திலும் அவர் அயராது பாடுபட்டு மக்களுக்குப் பேருதவி புரிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி கட்சிக்கு நல்ல பெயரையும் தொகுதி மக்களின் ஒருமித்த பாராட்டுகளையும் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இத்தொகுதியில் சந்தியாகோவைத் தவிர்த்து வேறு யாரும் போட்டியிட்டால், இந்தியர்களின் வாக்குகள் ஜசெகவுக்கு கிடைக்க சாத்தியமில்லை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
