
2015 மே 28ஆம் தேதி பெர்லிஸ், Wang Kelian (வாங் கெளியான்) காட்டுப் பகுதியில் 139 மியன்மார் பிரஜைகள் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழிகளும் 28 Transit camp என்று சொல்லப்பட்ட தற்காலிக மாற்றும் மையங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதனை ஆராய அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அது அமலாக்கத் துறையின் மெத்தனத்தையும் கவனயீனத்தையும் வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2012லிருந்து 2015ஆம் ஆண்டு வரை கணக்கில் அடங்கா மியன்மார் அகதிகள் மலேசியாவுக்கு அனுமதியின்றி நுழைந்ததைத் தடுக்க மலேசிய போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர். துரித நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்த காரணத்தினால் போலீஸ் துறை, தேசிய பாதுகாப்பு மன்றம், குடிநுழைவு இலாகா, எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவற்றிற்கிடையே தகவல் பரிமாற்றமும் ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கையும் இல்லாமல் போனது.
மலேசிய- தாய்லாந்து எல்லையில் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கை இல்லாது போனதால், ஆள் கடத்தல் கும்பல் தங்களுக்கு வாக்குறுதி கொடுத்தது போல பணம் கிடைக்காத காரணத்தினால், மியன்மார் அகதிகளை வாங் கெளியான் காட்டுப் பகுதியில் கொன்று புதைத்துள்ளனர் என அரச விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
