
அண்மையில் சபாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த பொதுதேர்தலை விட 54 விழுக்காடும், பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை 70 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதனைத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து அறிவிக்க வேண்டுமென பராமரிப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி, சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கண்டித்து விமர்சித்துள்ளனர்.
புதிய வாக்காளர் எண்ணிக்கையில் வயதானோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அது அரசியல் கட்சிகளின் வெற்றியைப் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
1990களில் மகாதீர் காலத்தில் தேசிய முன்னணி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்ற நோக்கத்தில், அந்நிய நாட்டவர்கள் ஆயிரக் கணக்கானோருக்கு அடையாளக் கார்டு வெளியிடப்பட்டு, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை தரப்பட்டதுபோல இது இருப்பதாகத் தலைவர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சபாவின் புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களின் அடையாளக் கார்டு, பிறப்புப் பத்திரத்தையும் காட்டிய பின்னரே அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
