
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள்தொகையை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், டோக்கியோவில் வசிக்கும் குடும்பங்களுக்கு பணம் கொடுத்து நகரத்தைவிட்டு வெளியே முடிவெடுத்துள்ளது. அதன்படி, டோக்கியோவில் இருந்து வெளியேறும் ஒரு குழந்தைக்கு ஜப்பான் மதிப்பில் 1 மில்லியன் யென் (ரூ.6,33,000) வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோ பகுதியை விட்டு வெளியேறினால் 3 மில்லியன் யென் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2027ஆம் ஆண்டிற்குள் டோக்கியோவில் இருந்து 10,000 பேர் வெளியேறி பிற பகுதிகளுக்கு செல்வார்கள் என்பது ஜப்பான் அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேநேரம் இந்தத் தொகையைப் பெறும் பெற்றோர்கள், டோக்கியோவிலிருந்து வெளியேறிய புதிய பகுதியில் 5 ஆண்டுகளாவது வசிக்க வேண்டும் எனவும், அந்தப் பணத்தில் புதிய தொழில் தொடங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒருவேளை 5 ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பகுதியிலிருந்து அவர்கள் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால், அரசு வழங்கிய தொகையை அந்நாட்டிடமே ஒப்படைக்க வேண்டும் என அவ்வரசு கூறியுள்ளது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
