
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஊழலில் ஈடுப்பட்ட துன், டான்ஸ்ரீக்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக அறிவித்தார்.
முதலீட்டாளர் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், ஒருவரின் அதிகாரம், பதவி ஆகியவற்றை மனதில் கொண்டு நடவடிக்கை எடுப்பதிலிருந்து தாம் பின் வாங்கப் போவதில்லை என்றும் சூளுரைத்தார்.
தமது ஆட்சியில் அதிகாரத் துஷ்பிரோகம் அறவே ஒழிக்கப்படும் என்றும் அதில் அச்சமோ, தயவு தாட்சண்யமோ காட்டப்படாது என்றும் குறிப்பிட்டார். ஊழலையும் தவறான நிர்வாக நடைமுறையையும் தாம் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமது உரையில் அவர் யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், பண்டோரா பேப்பர்ஸின்படி வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஸைனுடின் மற்றும் ஜானா விபாவா பொருளாதாரத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஆகியோரின் பெயர்கள் எம்ஏசிசியின் விசாரணைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கோவிட் பெருந்தொற்றின் செலவினத்தினால் நாட்டின் கடன் ஒன்றரை டிரில்லியனாக ( ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும்) அதிகரித்துள்ளதாகவும் அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 81 விழுக்காடாக இருப்பதால் 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அதனைக் குறைக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டிருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டார்
