
🔊To listen to this news in Tamil, Please select the text.
பினாங்குத் தீவு பெருநகர்மன்றத் தலைவராக இராஜேந்திரன் அந்தோணியை மாநில அரசு நியமித்துள்ளது. தற்போதைய மேயர் இயூ துங் சியாங், மே 5-ஆம் நாள் ஓய்வுபெறவிருக்கின்ற நிலையில், இந்த புதிய நியமனம் மாநில அரசால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சிமன்ற உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலம், ஒரு தமிழரை மேயராகக் காணவிருப்பது, வரலாற்றில் முதல்முறை ஆகும்.
60 வயதை எட்டுகின்ற இராஜேந்திரன், 1987இல் ஓர் இளநிலை பொறியியலாளராக பினாங்கு நகராண்மைக் கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை கடந்த 37 ஆண்டுகளாக வகித்துவரும் இவர், 2022 ஜனவரி முதல் நகர்மன்ற செயலராக பொறுப்பு வகித்துவரும் நிலையில், இப்பொழுது அந்தத் தீவு மண்டல நகராண்மைக் கழகத்தின் உச்சப் பதவியை அலங்கரிக்க இருக்கிறார்.
பினாங்கில் பசுமைப் பாதை என்றழைக்கப்படும் ஜாலான் மஸ்ஜித் நெகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் நிலவிய கடுமையான போக்குவரவு நெரிசலை, ஒருசில சாலைகளை ஒருவழிப் பாதையாக மாற்றி நுட்பமாக சமாளித்தவர் இராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
