
🔊To listen to this news in Tamil, Please select the text.
வரும் மாநிலத் தேர்தலில் சிலாங்கூரை வெல்ல முடியும் என்ற பாஸ் கட்சியின் நம்பிக்கை வெறும் பகல் கனவே என்று அமானா நெகாரா கட்சி கூறுகிறது.
பக்கத்தான் ஹராப்பான் வசமுள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பாஸ் கட்சி வசமுள்ள மாநிலங்கள் எந்த வளர்ச்சியையும் பதிவு செய்யாததே இதற்கு தக்க சான்றாக விளங்குகிறது என்று அமானா கட்சியின் சிலாங்கூர் மாநில தொடர்புப் பிரிவு இயக்குநர் வான் அன்வார் வான் இப்ராஹிம் கூறினார்.
பக்கத்தான் வசமுள்ள மாநிலங்கள் குறிப்பாக சிலாங்கூர் மக்கள் நலனைக் காப்பதில் அளப்பரிய பங்கினை ஆற்றியுள்ளது. பிறந்த குழந்தை முதல் ஆயுளின் இறுதிக் கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் மக்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை இம்மாநிலம் கொண்டுள்ளது. பாஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த வாய்ப்புகளை காண இயலாது என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்வதில் அயராது பாடுபட்டு வரும் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என தாம் நம்புவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஒரு அங்கமாக விளங்கும் அமானா கட்சி மக்களின் நலனுக்கு தொடர்ந்து போராடும் அதேவேளையில் மாநில அரசு நிர்வாகத்தில் நேர்மையும் உண்மையும் தொடர்ந்து நிலைநாட்டப்படுவதையு உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டார்.
