
🔊To listen to this news in Tamil, Please select the text.
எஸ்ஆர்சி சீராய்வு மனுவில் நஜிப் ரசாக் வெற்றி பெறவில்லை என்றாலும் அவரின் சகாப்தம் முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீராய்வு மனுவின் தீர்ப்பில் 4க்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் அவர் தோற்றிருந்தாலும், சபா, சரவாக் தலைமை நீதிபதி செப்லி அப்துல் ரஹ்மான், தீர்ப்பினை எதிர்த்து வாக்களித்திருப்பதானது நஜிப் இரண்டாவது சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் அரச மன்னிப்பைக் கோரினால், அது நிச்சயமாகக் கிடைக்கும் என்றும் உறுதியாகச் சொல்லப்படுகிறது.
நஜிப்பை கடுமையாக ஆதரித்து வந்த அவரது ஆதரவாளர்கள் இன்னமும் செயல்பட்டு வருகின்றனர். அவருக்கு ஆதரவாக ‘போஸ் கூ’ என்ற தாரக மந்திரம் இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பதால் அவரின் செல்வாக்கை எந்த நீதிமன்றத் தீர்ப்பும் அழித்து விட முடியாது என்றே தோன்றுகிறது.
ஜொகூர், மலாக்கா, சரவாக் தேர்தலில் நஜிப் ஆற்றிய பங்கு தேசிய முன்னணிக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்திருப்பதை வைத்துக் கணிக்கும்போது, தற்போது ‘பச்சை அலை’யைக் கையில் எடுத்து வரும் பெரிக்காத்தானின் அசுர வளர்ச்சியைத் தடுக்க நஜிப்பின் செல்வாக்கும் அவருக்கு மக்களிடையே இருக்கும் நன்மதிப்பும் நிச்சயமாக உதவும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
