
- 🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசியத் தமிழிலக்கியப் பூங்காவிற்கு மணம் பரப்பும் மலர்க்கொத்தை தொடர்ந்து அளித்துவரும் கவிஞர் செ.குணாளன், மூன்றாவது முறையாக அளித்திருப்பது, ‘அந்தாதிப் பறவைகள்’.
பினாங்குத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர்; பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அந்நாள் தலைவர்-இந்நாள் ஆலோசகர்; சுயமரியாதை சிந்தனை-யாளர்; பத்திரிகையாளர்; லிம் குவான் எங், பேராசிரியர் ப.இராமசாமி உள்ளிட்ட தலைவர்களின் நெருங்கிய வட்டத்தில் தொடர்பவர் என்னும் சிறப்புக்கெல்-லாம் உரியவரான பாவலர் செ. குணாளன், இயற்றியுள்ள அந்தாதிப் பறவைகள் என்னும் புதுக்கவிதை நூல் வெளியீட்டு விழா, நாளை ஏப்ரல் 08 சனிக்கிழமை மாலை நான்கரை மணி அளவில் தமிழர்களின்-இந்தியர்களின் தலைநகரத்து அடையாளம் துன் சம்பந்தன் மாளிகையின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா சிற்றரங்கில் நடைபெறவிருக்கிறது.

ஏப்ரல் 08, வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நாள், வரலாறு நெடுக ஏராளமான சம்பவங்கள் இந்த நாளில் பதிவு பெற்றிருந்தாலும் கடந்த நூற்றாண்டின் பெண் அரசியல் ஆளுமையரில் ஒருவரும் இரும்புப் பெண்மணியுமான மார்க்ரெட் தாட்சர், தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-கலைஞர் மு.கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிப் பழகியவரும் சிறந்தப் பாடகருமான இ.எம். ஹனிஃபா அகியோரின் நினைவு நாள் ஏப்ரல் 08.
வரலாற்றுப் பெருமைமிக்கதும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் சென்னை மாகாணத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்புமான சட்டமன்ற மேலவையில் 1986-இல் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த மேலவையை வஞ்சகத்துடன் கலைத்தவர் எம்ஜிஆர். அந்த மேலவையின் உறுப்பினராகவும் செயல்பட்டவர் இ.எம். ஹனிஃபா என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நில நிதி கூட்டறவு சங்க தலைமை இயக்குநரும் செயலருமான டத்தோ பா.சகாதேவன் முன்னிலை வகிக்கும் இந்த நிகழ்வில் அமைச்சர் வ.சிவக்குமார் தலைமையுரை ஆற்றி நூல் வெளியீடு செய்ய இருக்கிறார்.

கொடை நெஞ்சர் ஓம்ஸ் தியாகராஜன், துணை அமைச்சர் க.சரசுவதி, வடபுலத்து வர்த்தக வட்டத்தைச் சேர்ந்த டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு ஆகியோர் வாழ்த்துரையும் காவல்துறை மேநாள் அதிகாரியும் இலக்கியவாதியுமான டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் இலக்கிய உரையும் ஆற்றவுள்ள இந்த நிகழ்ச்சியை எழுத்தாளரும் தகவல்-பல்லூடகத் துறையைச் சேர்ந்தவருமான பொன்.கோகிலம் வழிநடத்துகிறார்.
‘சிந்தனை திலகம்’ இராமதாஸ் மனோகரன் நூல் ஆய்வுரை வழங்க இருக்கும் இந்த நிகழ்வில், இலக்கிய இன்பம் நாடவும் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு ஆதரவு அளிக்கவும் வருகை தரும்படி தமிழ் ஆர்வலர்களும் இலக்கியவாணர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேல் விவரத்திற்கு நூல் ஆசிரியர் செ.குணாளன்(013-4853128)
