
🔊To listen to this news in Tamil, Please select the text.
பத்துமலை, சன்வே மாஸ் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கடந்த 13-ஆம் நாள் 20 குரங்குகள் வரை துப்பாக்கி முனையில் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக குடியிருப்புவாசிகள் சார்பில் இன்று கோம்பாக் மாவட்ட தலைமை காவல் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சில குரங்குகளை கூண்டில் அடைத்தபின் சுட்டுக் கொன்ற கொடூரத்தை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பூங்காத் துறை-Perhilitan அதிகாரிகள், சாதாரண உடையில் வந்து நிகழ்த்தி உள்ளதாக குடியிருப்பாளர் குழு சார்பில் புகார் செய்தபின் அவதார் சிங் குண்டு சிங், அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால், திடீரென்று துப்பாக்கி வேட்டு சத்தத்தைக் கேட்ட குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் சுட்டுக் கொன்ற குரங்குகளில் சிலவற்றை அப்படியே விட்டுச் சென்றதால், அவற்றின் உடல்கெட்டு, கெட்டவாடை வீசியதாகவும் அவர் சொன்னார்.
Perhilitan சட்டவிதிகளின்படி, வனவிலங்குகளைக் கொல்லக் கூடாதென்றும் அவற்றைப் பிடித்து வேறு காட்டுப் பகுதியில்தான் விட வேண்டும். மாறாக, குடியிருப்புப் பகுதியில் இவ்வாறு ஈவு-இரக்கமின்றி செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
