
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாகை-இலங்கை கப்பல் நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. இன்னும் 4 தடவை மட்டும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 40 ஆண்டுக்கு பின் நேற்று முன்தினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. முதல் நாள் 50 பயணிகள் காங்கேசன் துறைக்கு சென்றனர்.
அதே போல் இலங்கை காங்கேசன் துறையில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு மாலை 5 மணிக்கு திரும்பிய கப்பலில் 30 பேர் வந்தனர். மறுநாள் (15ம் தேதி) பயணம் செய்ய 15 பேர் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ததால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து இனி வரும் நாட்களில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே கப்பலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் போக்குவரத்து வரும் 23ம் தேதி வரை மட்டும் நடைபெறும்.
அந்த வகையில் இன்னும் 4 தடவை மட்டுமே கப்பல் போக்குவரத்து இருக்கும். இதன்பின் நாகப்பட்டினம் துறைமுகம் விரிவாக்கம் செய்தல், மழை காலம் ஆகிய காரணங்களால் வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக இயக்க கப்பல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பாஸ்போர்ட் வைத்து இருப்பவர்கள் விசா பெறுவதற்கு தற்போதுள்ள நடைமுறை கடினமாக உள்ளது. இந்த நடைமுறையில் மாற்றம் செய்து ஆன்லைன் வாயிலாக எளிதில் விசா பெற இந்த இடைப்பட்ட காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
