
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒற்றுமை அரசாங்கம் உருவாக்கியுள்ள தரவு தளம்‘PADU’-இல் பதிந்து கொள்வதன் மூலம் பல நன்மைகளை அடையலாம்; சமையல் எண்ணெய், சீனி உள்ளிட்ட அத்யாவசிய பண்டங்களுக்கு மானிய தள்ளுபடி கிடைக்கும் என்பதால், தொடர்ந்து இந்த சலுகையைப் பெற அனைத்து இந்தியர்களும் குறிப்பாக ‘பி-40’ தரப்பு இந்தியர்கள், இந்த இணைய தளத்தில் தங்களை பதிந்து கொள்ள வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி கேட்டுக் கொள்கிறது.
இதுவரை தங்களை ‘PADU’-தளத்தில் பதிந்து கொள்ளாதவர்களுக்கு உதவ, மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மாநில அளவில் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த முன்னெடுப்பு தொடர்பில், வரும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25-ஆம் நாள், காலை 10:00 மணி அளவில் கிள்ளான் தெப்பி சுங்காய், ஜலான் லெம்பாஹா பண்டாரானில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் வட்டார அளவில் இந்தப் பதிவு நடவடிக்கை நடைபெற உள்ளது.
இதில கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டை முன்னும் பின்னுமான நகல், அதைப்போல குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டை நகல், திருமண பதிவு சான்றிதழ், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் இறப்பு சான்றிதழ், 3 மாதங்களுக்கான மாத சம்பள ரசீது, சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால் SSM சான்றிதழ் நகல், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் வரும்படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
மேல் விவரத்திற்கு அன்பாவை 011-3120 8220 என்ற எண்ணிலும் தேவியை 014-6045906 என்னும் தொடர்பு எண்ணிலும் அழைக்கலாம்.
