
இந்தியச் சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில், மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) அறிமுகப்படுத்தியுள்ள ‘உயர்வு மடானி’ மானியத் திட்டத்தை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மனமாரப் பாராட்டி வரவேற்றுள்ளார்.
இந்தத் திட்டம், இந்தியத் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் முக்கியமான முன்னெடுப்பாகவும் அமையும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், இந்தியச் சமூகத்தின் பொருளாதார வலிமையை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து நடைமுறை சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாகவும், அதில் ‘உயர்வு மடானி’ திட்டம் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என்றும் டாக்டர் குணராஜ் கூறினார்.
“700 இந்திய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மானியத் திட்டம், வெறும் நிதி உதவியாக இல்லாமல், புதிய தொழில்களை உருவாக்கவும், ஏற்கனவே இயங்கி வரும் தொழில்களை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, இந்திய சமூகத்தின் பொருளாதார பங்களிப்பும் மேலும் வலுப்பெறும்,” என்று அவர் தெரிவித்தார்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் தலைமையிலும், மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயரின் ஒருங்கிணைப்பிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குறு தொழில்களுக்கு RM20,000, வளர்ச்சியடைந்து வரும் தொழில்களுக்கு RM35,000, வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோருக்கு RM50,000 வரை வழங்கப்படும் மானியம், இந்தியத் தொழில்முனைவோருக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமாக அமையும் என்றார்.
இந்த வாய்ப்பை இந்தியத் தொழில்முனைவோர் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களது தொழில்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், மடானி அரசாங்கம் வழங்கும் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்றும் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அழைப்பு விடுத்தார்.


