
சிலாங்கூர் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் திவாலானதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்ட நிலையில், எந்தவொரு சட்டமன்றத் தொகுதியையும் காலியானதாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போதைய நிலையில், எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து பதவி வகிக்க முடியாத அளவுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கண்டறியப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் திவாலானதாக தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கக்கூடும் என்றும், சம்பந்தப்பட்ட தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்றும் ஆருடங்கள் வலுத்தன.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து விளக்கம் பெறப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த திவால் உத்தரவை சிலாங்கூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாகும் சூழ்நிலை தற்போது இல்லை என்பதுடன், சிலாங்கூரில் இடைத்தேர்தலுக்கான அவசியமும் எழவில்லை என்று சபாநாயகரின் விளக்கத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.



