
சிங்கப்பூரிலிருந்து கட்டுமானக் குப்பைகளை ஜொகூரில் கொட்டியதாக ஒன்பது நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
ஒன்பது நிறுவனங்களும் ஜொகூரில் பதிவு செய்யப்பட்டவை.
சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டியது தொடர்பாக போதிய ஆதாரம் திரட்டப்பட்டிருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் SWCorp எனும் திடக்கழிவு, பொதுத்துப்புரவு நிர்வாகக் கழகம் சொன்னது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100,000 ரிங்கிட் வரை (சுமார் 31,000 வெள்ளி) அபராதம், ஐந்தாண்டு வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரிலிருந்து துவாஸ் வழியாக அந்த நிறுவனங்கள் ஜொகூரின் பொந்தியான் (Pontian) வட்டாரத்தில் மூன்று இடங்களில் குப்பைகளைக் கொட்டியதாக நம்பப்படுகிறது.
மலேசியாவின் Kosmo ஊடகம் முதலில் செய்தி வெளியிட்டது.
இரவிலும் அதிகாலை நேரத்திலும் கனரக வாகனங்கள் குப்பைகளைக் கொட்டியதாக ஊடகம் குறிப்பிட்டது.
இதனால் அங்குள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதுடன், சாலைகளும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கான்கிரீட் தகடுகள், உலோகக் குழாய்கள், இரும்புக் கம்பிகள், கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்படும் தலைக்கவசங்கள், பாதுகாப்பு மேலங்கிகளும் குப்பைகளில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (Lim Lip Eng) யார் லாரிகளைச் சோதித்து குப்பைகளை உள்ளே விட்டது என்று கேள்வி கேட்டார்.
முழுமையான விசாரணை நடத்தச் சிறப்புப்பணிக்குழு அமைக்கப்படும் என்று ஜொகூர் மாநில அரசாங்கம் சொன்னது.



