
🔊To listen to this news in Tamil, Please select the text.
இன்று ஷவ்வால் மாத பிறை கண்டுள்ளதைத் தொடர்ந்து நோன்பு பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் சமுதாயத்தினர் அனைவருக்கும் ஹரி ராயா நல்வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாக மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
பல இன மக்கள் வாழும் மலேசியா, சமய-சமூக நல்லிணக்கத்திற்கு எப்பொழுதும் முன்னுரிமை அளிக்கும் திருநாடு ஆகும்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் முதன்மையானது நோன்பு மாதத்தில் நோன்பு நோற்பது.
அத்தகைய நோன்பை ஒரு மாத காலத்திற்கு நிறைவேற்றியபின், இன்று ஷவ்வால் மாத முதல் நாளில் நோன்புத் திருநாளை குதூகலத்துடன் இஸ்லாமிய அன்பர்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு ஹரி ராயா பண்டிகையின் இன்னொரு சிறப்பு, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகள் உட்பட உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதாகும்.
ஒருசிலரால் அவ்வப்பொழுது சலசலப்பு எழுந்தாலும் மலேசியா இன்னமும் சமய நல்லிணக்கத்தை மதித்து போற்றும் நாடாக இருப்பதில், மலேசியர்களாகிய நாம் பெருமை கொள்வோம்.
இந்த ஹரிராயா திருநாள், மலேசிய கூட்டு சமுதாயத்தின் ஓருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த உதவட்டும் என்றும் முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் மீண்டும் நோன்புத் திருநாள் வாழ்த்து உரித்தாகட்டும் என்றும் ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் வெளியிட்டடுள்ள ஹரிராயா வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
