
🔊To listen to this news in Tamil, Please select the text.
வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு- (குறள் 595)
எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்க இருக்கும் டத்தோஸ்ரீ முனைவர் மு.சரவணன் அவர்களுக்கு மலேசிய இந்து சங்கம், எல்லாம் வல்ல பரம்பொருள் துணையுடன் தனது மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தின்மூலம் தன் பொதுவாழ்வைத் தொடங்கிய டத்தோஸ்ரீ அவர்கள், மலேசிய இந்து சங்கத்திற்கு உற்றுழி உதவுவதை மலேசிய இந்து சங்கம் எப்போதும் நினைவில் கொண்டிருக்கும்.
மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியுமான டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள், தான் தலைமை வகிக்கும் கண்ணதாசன் அறவாரியத்தின் மூலம் தமிழ் மொழிக்கும்-தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் ஏராளமாக தொண்டாற்றி வருகிறார்.
மக்கள் தொண்டர் என்பதுடன், சிறந்த பேச்சாளராகவும் திகழும் டத்தோ சரவணன் அவர்களுக்கு, ‘சொல்வேந்தர்’ என்ற பட்டம் வழங்கி இருப்பது மிகவும் பொருத்தம். அப்படிப்பட்டவர், எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்பது, இன்னும் சிறப்பு.
இப்பெருமகன், நீடு வாழ்ந்து சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் தமிழ் மொழிக்-கும் தொண்டாற்றி, இன்னும் பல பெருமைகளை எட்டிட இறையனாராம் எம்பெருமானார் அருள்புரியும்படி, அவன்தாள் பணிவதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
