
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசிய இந்திய சமுதாயம் இன்னும் இரண்டொரு மாதங்களில் இன்னோர் ஏமாற்றத்தை சந்திக்கவிருக்கிறது; 2024 கல்வி ஆண்டிற்கான மெட்ரிகுலேஷன் இடங்களும் உயர்க்கல்வி வாய்ப்பும் நிறைவடையும்போது, அந்த ஏமாற்றம் நலிந்த இந்திய சமுதாயத்தைப் பற்றிக் கொள்ளும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தகவல் பிரிவுத் தலைவர் கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஏழைப் பெற்றோரும் பிள்ளைகளின் எதிர்காலத்தில் அக்கறைக் கொண்ட தாய்-தந்தையரும் தங்கள் குழந்தைகளை படிப்பில் சிறந்து விளங்கும்படி ஊக்குவிக்கின்றனர். அதற்கேற்ப பிள்ளைகளும் தங்களின் சிறார் பருவத்தையும் விடலைப்பருவ வாழ்க்கையையும் கல்வி பெறுவதிலேயே கழித்துவிடுகின்றனர். இப்படிப்பட்ட பிள்ளைகள், தங்களின் உயர்கல்விக்கான இடம் வழங்கப்படும்போது பெரும்பாலும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.
பெரும்பான்மை பூமிபுத்ரா நலம் சார்ந்த உறுதியான கொள்கை அமலாக்கம், பின்தங்கிய நிலையில் உள்ள பூமிபுத்ரா குடும்பங்கள் மறுமலர்ச்சி காண துணைபுரிவது உண்மைதான்; அதேவேளை, ஏழை இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்கள் வளப்பமான சீன சமூகத்துடன் சேர்த்து கணக்கில் கொள்ளப்படுகின்றனர்.
இதை யெல்லாம் சொல்லி, இனவாதம் எழுப்பவதாக தான் பெயரெடுக்க விரும்பவில்லை யென்றும் அதேவேளை உண்மையிலும் உண்மையான ஒன்றை திரைபோட்டு மறைத்துவிட முடியாது; உரிமைக் குரல் எழுப்புவதை இனவாதக் குரல் என்று எத்தனைக் காலத்திற்கு தட்டிக்கழிப்பீர்-கள் என்று ச. கார்த்திகேசன் கேள்வி யெழுப்பி உள்ளார்
பூமிபுத்ரா கொள்கையினால் பயனடைந்த மலாய்க்காரர்கள் உட்பட அதிகமான மலேசியர்கள், தங்களுக்கு பொருத்தமான வாய்ப்பிற்காக வெளிநாடுகளில் குடியேறுவதால், மலேசியாவின் சிந்தனை வளமும் இளம் ஆள்பலமும் குன்றி வருகின்றன; உயர்க்கல்வி பெற்றிருந்தும் தோலின் நிறம்-இன அடையாளம் ஆகியவற்றால் புறக்கணிக்கப்படும் இன்றைய இந்திய இளைஞர்கள், ஏன் இந்த பாரபட்சம்-புறக்கணிப்பு என்று தங்களுக்குள்ளே கேட்டு மனம் விம்மி நிற்கின்றனர்.

மலேசிய கூட்டு சமுதாயத்தின் நாயகன் தான்தான் என்று பறைசாற்றிக் கொள்ளும் பிரதமர் அன்வார், இன்றைய கல்வி முறையை மாற்றி, சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக வழக்கறிஞருமான கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிறப்பு செயல் திட்டம் மலாய் சமூகத்தை மேம்படுத்த வில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே, பின்தங்கிய மலாய்க்காரர்கள் மற்றும் அரசின் உதவிக்கரத்தை நாடுவோர் குறிப்பாக நலிந்த இந்தியர்கள், பூர்வகுடி மக்கள் ஆகியத் தரப்பினரை மேம்படுத்தும் புதிய அரசியல் மனப்பான்மைதான் இன்றைய தேவை என்பதை பிரதமர் உணர்வாரா அல்லது வரும் 16-ஆவது பொதுத் தேர்தலில் தன்னுடைய இருப்பை எப்படி தக்கவைத்துக் கொள்வது எனபதில் மட்டும் முனைப்பு காட்டுவாரா என்று கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார் மனித உரிமை ஆர்வலருமான ச. கார்த்திகேசன்.
