
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிரம்பான், ஜூலை 01:
இந்து குடும்பங்களில் குறிப்பாக வளரும் இளம் தலைமுறையினரிடையே ஆன்மிக சிந்தனை, நன்னெறிக் கூறு, சமய பண்புநலன் ஆகியவை தழைக்க வேண்டும் என்றால் ஒவ்வோர் இந்துக் குடும்பத்திலும் இடம்பெறும் இல்ல வழிபாடு சீராகவும் செம்மையாக இருக்க வேண்டும். குறிப்பாக, மதமாற்ற நடவடிக்கையை முறியடிக்கவும்; இல்ல வழிபாட்டுடன் கூட்டுப் பிரார்த்தனை-யும் மேம்பட்டால், அது இந்து மக்களிடையே இணக்கத்தையும் நெருக்கத்-தையும் ஏற்படுத்தும் என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்க மகளிர் பிரிவினர் ஏற்பாடுசெய்த இந்த இல்ல வழிபாடு-கூட்டுப் பிரார்த்தனைப் பயிற்சி அரங்கத்தைத் தொடக்கிவைத்து பேசியபோது, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பாரம்பரிய சமய அமைப்பான இந்தச் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவரான கணேஷ் பாபுவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
2024 டிசம்பர் 31-ஆம் நாளுக்குள், நாடு முழுவதிலும் 1,000 குடும்பங்களில் இல்ல வழிபாட்டை நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மகளிர் பிரிவினர் நினைத்தால் இது சாத்தியம்; 100 பயிற்சியாளர்கள் ஒருவருக்கு 10 குடும்பங்கள்வீதம் பயிற்சி நடத்தினால், இந்த இலக்கை எளிதாக எட்டமுடியும்;
தேசியத் தலைவர் குறிப்பிட்டதைப் போல, இல்ல வழிபாடும் கூட்டுப் பிரார்த்தனையும் நம் இந்துக் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு ஏற்ப, கூடிய விரையில் இல்ல வழிபாடு-கூட்டுப் பிரார்த்தனை குறித்த சிறுநூலை மலேசிய இந்து சங்கம் வெளியிடும் என்றும் கணேஷ் பாபு தெரிவித்தார்.

இல்ல வழிபாடும் சுற்று வட்டார இந்துக் குடும்பங்களை ஒருங்கிணைத்து ஆலயங்களிலோ அல்லது பொது இடத்திலோ நடத்தப்படும் கூட்டுப் பிரார்த்தனையும் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதற்காக, மலேசிய இந்து சங்க தேசிய மகளிர் பிரிவு சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நூற்றுக் கணக்கான குடும்பத் தலைவிகள், மாணாக்கர், சிறார் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

தேசிய மகளிர் தலைவி தொண்டர்மணி முனைவர் கலைவாணி சண்முகம் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுசெய்த இந்த நிகழ்ச்சி நெகிரி செம்பிலான், 10 ஜாலான் செங் மெங் லீ, அருள்மிகு இராகவேந்திர சுவாமி ஆசிரமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 30, காலையில் தொடங்கி பகல் உணவுடன் நிறைவுபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், பகாங் மாநிலங்களைச் சேர்ந்த இந்து சங்க மாநில மற்றும் வட்டாரப் பேரவைகளின் மகளிர் தலைவிகள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, ஜோகூர் தலைவி விவேகரத்னா அன்புக்கரசி, மலாக்கா தலைவி கவிதா, நெகிரி செம்பிலான் தலைவி விஜயா இராமையா, மத்திய செயலவை உறுப்பினர் திருமதி காயத்ரி உள்ளிட்டோர் அளித்த பங்களிப்பு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த துணைபுரிந்ததாக தெரிவித்த கலைவாணி,
சமயக் கல்வி-கேள்வியில் சிறந்த ஸ்ரீ சிவஸ்ரீ நா. தினேஷ் வர்மன் சிவம் வழிநடத்திய இந்த நிகழ்ச்சியில் சிறார் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து சமயத்தெளிவும் ஆன்மிக விளக்கமும் பெற்றனர் என்று மேலும் தெரிவித்தார்.
