
குளுவாங், செப்.23:
மலேசிய இந்திய சமுதாயத்தின் மாண்பைக் காப்பது, நாடு விடுதலை அடைந்ததுமுதல் தொடர்ந்து 60 ஆண்டுகள் நாட்டை வழிநடத்திய தேசிய முன்னணியும் அதன் அங்கமாக இருக்கும் மஇகா-வும்தான் என்பதை இந்திய சமுதாயம் இப்போது நன்கு உணர்ந்துள்ளது என்று மஇகா தேசியத் தலைவர் மக்கோத்தா தேர்தல் களத்தில் முரசு கொட்டும் விதமாக முழங்கினார்.
வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 28-இல் பெறவுள்ள இடைத் தேர்தல் தொடர்பாக குளுவாங் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் வழக்கத்திற்காக மாறாக அடித்தாடும் வகையில் உரக்க முழங்கிய டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனை அம்னோத் தலைவரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி வைத்தகண் மாறாமல் புன்னகை தவழ்ந்த முகத்துடன் உற்றுநோக்கியபடி அமர்ந்திருந்ததை பலரும் ரசித்தனர்.
அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதை யெல்லாம் கேட்டுக் கொண்டு எடுப்பார் கைப்பிள்ளையாக இந்தியர்கள் இருந்த காலம் மலையேறிவிட்டது. இன்றைய சூழலில் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறாத நிலையிலும், இந்திய சமுதாயத்தைக் காக்கும் கரமாகவும் எதிர்கால மீட்சிக்குத் துணையாக இருப்பது கல்வி மறுமலர்ச்சி ஒன்றுதான் என்பதை இலக்காகக் கொண்டு, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான வெள்ளியை செலவழிப்பதும் மஇகா-தான் என்பதை இந்திய சமுதாயம் இப்பொழுது நன்கு உணர்ந்துள்ளது என்பதற்கான அடையாளம்தான் பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் குளுவாங் பட்டணத்தில் திரண்டிருக்கும் இந்தத் திருக்காட்சி என்று அகண்ட மேடையில் நின்றபடி நாற்புறமும் பார்த்தபடி டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பேசியக் காட்சி, இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி இப்பொழுதே வெற்றிபெற்றதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் கட்சியல்ல மஇகா; எந்தக் காலத்திலும் சமுதாயத்தில் ஊடாடி, உறவாடும் பாரம்பரிய அரசியல் இயக்கம் என்பது, தீபகற்ப மலேசியா மட்டுமல்ல; போர்னியோ மாநிலங்களிலும் பிரதிபலிக்கிறது.
மக்கோத்தா இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ள தேசிய முன்னணி வேட்பாளர் சைட் உசேன் சைட் அப்துல்லா, அம்னோ கட்சியைச் சேர்ந்தவர் மட்டுமல்ல; அவர் இந்திய சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்-தக்கது. இவர் பெறப்போகும் அபார வெற்றி, வரும் 16-ஆவது பொதுத் தேர்தலில் மஇகா-விற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.
தவிர, மக்கோத்தா தொகுதிவாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இடுகாட்டு நிலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உதவியாக இருக்கும். அதனால், இந்த இடைத் தேர்தலில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் சிந்தாமல் சிதறாமல் நம் வெற்றி வேட்பாளரும் துடிப்பான சமூக ஆர்வளருமான சைட் உசேனுக்கு க் கிடைப்பதை மஇகா உறுதி செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற மேலவை மேநாள் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டபொழுது, எழுந்த ஆதரவு முழக்கம் விண்ணைத் தொட்டது.
எல். சிவசுப்பிரமணியன்
தேசியத் தலைவரின் ஊடகச் செயலர்
