
பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக விளங்குகின்றன என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் தெரிவித்துள்ளார்.
செந்தோசா சட்டமன்ற தொகுதியின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 7ஆவது ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மலாய் சமூகத்தினருடன், இந்தியர், சீனர் உள்ளிட்ட பல இன மக்கள் இணைந்து பங்கேற்றது மகிழ்ச்சியை அளிப்பதாக குணராஜ் குறிப்பிட்டார்.
“இத்தகைய விழாக்களே நமது நாட்டின் ஒற்றுமையை உண்மையாக பிரதிபலிக்கின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மேலும் பரவலாக நடத்தப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் செலாங்கூர் முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்து வரும் மக்கள் நலத் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“அரசுத் திட்டங்கள் மக்களிடம் சரியாகச் சென்றடையவில்லை என்றால் அதன் பாதிப்பு நமக்கே ஏற்படும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, இந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்,” என்று குணராஜ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி, பல இன மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
