
பீஜிங் தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி செய்யும் பிரமாண்ட அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இது, இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது திபெத். இங்கு ஓடும் யார்லாங் ஜாங்க்போ நதியில், பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா, 2020ல் திட்டமிட்டது.
மிகவும் சிக்கலான வடிவமைப்பு காரணமாக தாமதமாகி வந்த நிலையில், தற்போது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த நதியில் இருந்து ஆண்டுக்கு 30,000 கோடி கிலோவாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இது, உலகின் மிக பிரமாண்டமான நீர்மின் உற்பத்தி செய்யும் அணையாக விளங்கும். தற்போது மத்திய சீனாவின், ‘த்ரீ கார்ஜஸ் டாம்’ என்ற அணைதான் உலகின் பெரிய நீர்மின் அணையாக உள்ளது. அதைவிட, இது மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் என, கூறப்படுகிறது.
