
சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டத்தால் தேவசம்போர்டு திணறிவருகிறது. பம்பையில் கூட்டத்தை கட்டுப்படுத்த மூன்று ‘ஸ்பாட் புக்கிங் ‘கவுன்டர்கள் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டது. மகரஜோதி நாளில் ‘ஸ்பாட் புக்கிங் ‘ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல காலம் பெரிய அளவிலான புகார்களுக்கு இடம் கொடுக்காமல் நிறைவு பெற்றது. ஆனால் மகர விளக்கு கால பூஜைகளுக்காக நடை திறந்த நாள் முதல் பக்தர்களின் நீண்ட கியூ எப்போதும் மர கூட்டம் வரை காணப்படுகிறது.இதனால் ஏழு முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்துதான் 18 படிகளில் ஏற முடிகிறது. ‘ஸ்பாட் புக்கிங் ‘கவுன்டர்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதில் அதிகபட்சமாக 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே பாஸ் வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் தினமும் 22 முதல் 25 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது .இதனால் குளறுபடிகளும் அதிகமாகிவிட்டது. இதற்கிடையில் எருமேலியிலிருந்து 16 கி.மீ. நடந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்கள் ஆன்லைன் பதிவு சீட்டு இல்லாத பட்சத்தில் பெரியான வட்டத்திலிருந்து நீலிமலைக்கு திருவாபரண பாதையில் வந்து ஏறுகின்றனர். இதனால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து அதிகாரிகள் திணறிவருகின்றனர். 24 மணி நேரமும் பக்தர்கள் படி ஏற அனுமதிக்கப் படுகின்றனர். நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் படியேறும் பக்தர்கள் வடக்கு வாசலில் பல மணி நேரம் கியூவில் நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.
