
கோலாலம்பூர் பிப் 4-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் உள்ள துன் சம்பந்தன் பைன்ஸ் விற்பனை தளத்தில் சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு எப்படி டிபிகேஎல் கடையை கொடுக்க முடியும் என்று வியாபாரிகள் இன்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
எங்களுக்குரிய கடைகளை எங்களுக்கு கொடுக்காமல் மற்றவர்களுக்கு கொடுத்தது ஏன் என்று வியாபாரிகள் கேள்வி எழுப்பினர்.
இங்கு பல ஆண்டுகளாக நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம்.
எனக்கு கீழ்த்தளத்தில் 4 எண் கொண்ட கடை வழங்கப்பட்டது.
ஆனால் அந்த கடையில் வியாபாரம் செய்ய எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
என் கடைக்காக பத்து ஆண்டுகள் போராடி வருகிறேன்.
பலமுறை டிபிகேஎல் அதிகாரிகளை பார்த்து முறையிட்டுள்ளேன்.
ஆனால் இதுநாள் வரை எனக்கு கீழ்த்தளத்தில் 4 எண் கொண்ட கடை வழங்கப்படவில்லை என்று செல்வம் உணவகத்தின் உரிமையாளர் சுமதி தெரிவித்தார்.
கீழ்த்தளத்தில் 6 எண் கொண்ட கடையில் நான் வியாபாரம் செய்து வந்தேன்.
கோவிட் 19 காலக்கட்டத்தில் என்னால் வியாபாரம் செய்ய முடியாமல் போனது.
மேலும் என் கணவர் மாற்றுத் திறனாளி ஆவார்.
இப்போது மீண்டும் வியாபாரம் செய்ய வந்திருக்கிறேன்.
ஆனால் என் கடையை இங்கு வியாபாரம் செய்யாத ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள் என்று கலைச்செல்வி வேலு தெரிவித்தார்.
இங்கு கடைகள் ஒதுக்கி தரும் விவகாரத்தில் பல மோசடிகள் நடந்துள்ளது.
ஆகவே டிபிகேஎல் விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் தலையிட வேண்டும் என்று இங்கு நீண்ட காலமாக வியாபாரம் செய்து வரும் புவான் நூருல் தெரிவித்தார்.
ஒரே குடும்பத்திற்கு மூன்று கடைகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் ஒளிவு மறைவின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கோலாலம்பூர் மாநகர் மன்றம் இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தில் முறையிடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
