
காணாமற்போன மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச்370 பயணிகள் விமானத்தைத் தேடும் பணிகளை மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ளது.
சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமற்போன அவ்விமானத்தைத் தேடும் பணிகளை மீண்டும் தொடங்க தாங்கள் அக்கறை கொண்டுள்ளதாக மலேசிய அரசாங்கம் மறுவுறுதிப்படுத்தி உள்ளது.
தேடலை மீண்டும் தொடங்க வகைசெய்யும் புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
தேடல் பணிகளுக்குக் கைகொடுக்க அமெரிக்க தேசிய போக்குவரத்து வாரியம், ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் இரண்டும் பிரதிநிதிகளை நியமித்துள்ளது.
கிடைத்திருக்கும் நம்பகமான துப்புகளைக் கொண்டு எம்எச்370 கடைசியாக இருந்த இடத்தைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சரியான தகவல்களை அளிக்கும் நோக்கில் தேடலைத் தொடரும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
இந்தத் தேடல் பணிகளில் பொதுமக்களுக்கு இருக்கும் அக்கறையை அமைச்சு அறிகிறது.
மலேசிய அரசாங்கத்தின் நடைமுறைகளுக்கு இணங்க மீண்டும் தேடல் பணிகளைத் தொடங்குவதற்கு வகைசெய்யும் ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியில் அமைச்சு தீவிரமாக இறங்கியுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
