
தாமான் மில்லேனியம் பகுதியில் வெள்ள அபாயத்தை நீண்டகால அடிப்படையில் குறைப்பதற்காக, வடிகால் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மழைநீர் தேக்கக் குளம் (Dry Pond) அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு அண்மையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வில் தாமான் மில்லேனியம் குடியிருப்பாளர் சங்க பிரதிநிதிகள், மன்ற உறுப்பினர் தங்கராஜ், மன்ற உறுப்பினர் ரோய் ஞானேஸ்வரன் மற்றும் கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (MBDK) பொறியியல் துறை இயக்குநர் துவான் ஸைடி ஆகியோர் கலந்து கொண்டனர். திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, தொழில்நுட்ப தேவைகள் மற்றும் மக்களின் கருத்துகளை நேரடியாக அறியும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வின் போது உரையாற்றிய டாக்டர் குணராஜ், உள்ளூர் மக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்ய வெள்ளப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வுகள் அவசியம் என்று வலியுறுத்தினார். உள்ளூர் நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பயனுள்ள மற்றும் நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த டாக்டர் குணராஜ், தாமான் மில்லேனியம் மக்களின் நலனுக்காக சிறந்த தீர்வை விரைவாக செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.



