
பினாங்கில் செயல்படும் 21 அரசு சாரா அமைப்புகள், பாலஸ்தீன மக்களுக்கு தங்களின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியதோடு, காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேலின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளன.
மலேசியாவின் “சிட்டிசன்ஸ் இன்டர்நேஷனல்” இயக்குநர் முஹைதீன் அப்துல் காதர், “உலக அல்-குத்ஸ் தினம்” பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்க சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டிய நேரம் என தெரிவித்துள்ளார்.
“காசா தற்போது மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள், பீரங்கி குண்டுவீச்சுகள், இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.
“இஸ்ரேல் ஒரு போதும் சமாதானத்திற்கு முயற்சி செய்யவில்லை. அவர்கள் பாலஸ்தீனியர்களை முற்றிலும் அழிக்க மட்டுமே விரும்புகிறார்கள்” என்று முஹைதீன் குற்றம் சாட்டினார்.
சர்வதேச சமூகம் இந்த போர்க்குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
