
மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லாஹ் அஹ்மது படாவி அவர்களின் மறைவு செய்தியை அறிந்தவுடன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக விரைந்து அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
“பாக் லா ஒரு தலைவர் மட்டுமல்ல, மலேசிய அரசியலில் புதிய மற்றும் நேர்மையான அணுகுமுறையை ஏற்படுத்திய ஒரு கருணையுள்ள மனிதர்,” என அவர் உருக்கமாக கூறினார்.
அப்துல்லாஹ்வின் தலைமைத்துவம் நேர்மை, அமைதி, அரவணைப்பு, மனிதாபிமானம் ஆகியவற்றை பிரதிபலித்தது என அன்வார் பாராட்டினார்.
“அவரது ‘இஸ்லாமிய ஹதாரி’ கொள்கை, மதிப்புகளோடு கூடிய வளர்ச்சியின் பக்குவமான வடிவம். நீதித்துறையில் சீர்திருத்தங்கள், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, ஊடக சுதந்திரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் அவர் செய்த பங்களிப்பு நீடிக்கும்,” என அவர் குறிப்பிட்டார்.
