
பல சமூக மற்றும் நிர்வாக இயக்கங்களில் முக்கிய பதவிகளில் செயல்பட்டு வந்த அனுபவத்தின் அடிப்படையில், மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் உதவிகளும் சிறப்பாக கிடைக்க வேண்டும் என்பது என் கருத்து என்று Anugerah Corporate & Training Services நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மகேஷ் சரெரா ராம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“நம் இந்திய சமூகம் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் சவால்களை சந்தித்து வருகிறது. வியாபாரம், கல்வி, தொழில், பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நம் பிரதமர் அவர்கள் ஏழை மக்களுக்கு உதவும் பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்; அதனை மேலும் விரிவு செய்து வழங்க வேண்டும் என நான் முன்வைக்கிறேன்.”
அதே நேரத்தில், கோவில் நிர்வாகம் தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்தினார்.
“நம் சமூகத்தில் கோவில்கள் மிகவும் அதிகமாக உள்ளன. அவற்றைச் சரியான முறையில் சீரமைத்து, சமநிலையுடன் பராமரிக்கும் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். கோவில்கள் இளைஞர்களுக்கான சமூக–கலாச்சார மையங்களாக மாற வேண்டும். இந்திய இளைஞர்களுக்கு நம் பண்பாடு, மரபு, கலாச்சாரம் ஆகியவற்றை கற்பிக்கும் திட்டங்கள் கோவில்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு பரதநாட்டியம் போன்ற கலைகளை கற்றுக்கொடுக்கும் தளங்களை உருவாக்குவது இந்திய சமூகத்தின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், உணவகங்கள், ஜவுளிக்கடைகள் மற்றும் பல்வேறு சிறு–நடுத்தர வணிகங்களில் தொழிலாளர் பற்றாக்குறை தீவிரமடைந்து வருவதை குறிப்பிட்ட அவர்,
“இந்தத் துறைகளில் காணப்படும் தொழிலாளர் குறையை அரசாங்கம் உடனடியாக சரிசெய்ய வேண்டும். வணிகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை புரிந்து, அவர்களுக்கு தேவையான ஆதரவுகளை வழங்குவது பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியம்,” என்றார்.
நாட்டில் பல இயக்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில்,
“இந்தியர்கள் அனைவரும் ஏழை மக்களுக்காக ஒன்றிணைந்து உதவும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். சமூக ஒற்றுமை மட்டுமே நமது உண்மையான பலம். இந்த ஒற்றுமையை அரசு மேலும் வலுப்படுத்த வேண்டும்,”
என்று அவர் கவலை தெரிவித்தார்.
“நமது பிரதமரின் நல்லாட்சிக்கான முயற்சிகளை வலுப்படுத்துவோம்,”
என்று முடிவுரையாக மகேஷ் சரெரா ராம் தெரிவித்தார்.
