
-பி. மலையாண்டி
தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அமரர் ஆறு. நாகராஜன்-சகுந்தலை அம்மாள் இணையரின் புதல்வர் நா.ராமேஷ்வரன் – பிரியா தம்பதியரின் புதல்வியும் மலேசியாவில் தமிழ் ஊடக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும் தோட்டத் தொழில் ஜாம்பவனாக விளங்கியவருமான அருள்மாமணி என். டி. எஸ்.ஆறுமுகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தியுமான சீதை ஸ்ரீ நாச்சியாருக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் புதல்வரமான ஆ.ஜீவன் குமாரவேல் தொண்டைமான் ஆகியோர் திருமணம் அண்மையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை- சீதையம்மாள் கல்லூரி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற இத்திருமண விழாவில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் சமூகப் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இலங்கை முன்னாள் பிரதமர்-அதிபர் ரணில் விக்ரமசிங்கே, – மைத்திரி விக்ரமசிங்கே இணையர் திருப்பத்தூருக்கு நேரடியாக வருகை புரிந்து மணமக்களை வாழ்த்தினார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான மணமகன் ஆ.ஜீவன் குமாரவேல் தொண்டமானின் தந்தை, ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த போது, அவரின் அமைச்சரவையில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தார்.
திருமண நிகழ்வில் தமிழக அரசியல் பிரமுகர்களான
திமுக சிவகங்கை மாவட்ட செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆர். பெரிய கருப்பன்,
திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி,
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை,
மதிமுக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம், கிருஷ்ணசாமி வாண்டையார், உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமான கூடாரம் அமைக்கப்பட்டு நடைபெற்ற இந்த திருமண விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மணமகன் ஆ.ஜீவன் குமாரவேல் தொண்டமான் – சீதை ஸ்ரீ நாச்சியார் மணவிழா,
மிகவும் கோலாகலமாக
நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின், மணமகன் வீடடார் சார்பாக திருமண விருந்துபசரிப்பு இலங்கை, கொழும்புவில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

திருப்பத்தூர் திருமண விழாவிலும் இலங்கை கொழும்புவில் நடைபெற்ற விருந்து உபசரிப்பிலும்
மலேசியாவில் இருந்தும் அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.
தவிர, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சமூகப் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மணமக்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.
