
கிரேட் பாத் (Pool and Spa Professional) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நாதன் (43) அவர்களின் தொழில்முறை பயணம், உறுதி, உழைப்பு மற்றும் பொறுமையின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. சேராஸில் உள்ள ஒரு எளிய குடியிருப்பில் வளர்ந்த நாதன், இன்று மலேசியாவின் முன்னணி நீச்சல் குளம் மற்றும் ஸ்பா சேவைகளுக்கான ஒரே இடத் தீர்வு வழங்கும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
கிரேட் பாத் நிறுவனம், உயர்தர வீட்டு உரிமையாளர்கள், முதல் முறையாக நீச்சல் குளம் அமைப்பவர்கள், ஏற்கனவே குளம் வைத்திருப்பவர்கள் மற்றும் வணிக நீச்சல் குளம் மேலாண்மை சேவைகள் ஆகிய சந்தைகளை இலக்காகக் கொண்டு கோலாலம்பூர், செலாங்கோர், புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலான் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
சேராஸில் உள்ள பல இனங்களைச் சேர்ந்த குடியிருப்பில் வளர்ந்தது, தனது தன்னம்பிக்கையையும் சமூக வலையமைப்பையும் உருவாக்க உதவியதாக நாதன் கூறினார். அக்காலத்தில் அறிமுகமான பலரும், பின்னர் அவரது வணிகத்தின் ஆதரவாளர்களாகவும் வாடிக்கையாளர்களாகவும் மாறினர்.
“என் தந்தையே என் முதல் தூண்டுதலாக இருந்தார். நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தின் அர்த்தத்தை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்,” என நாதன் தெரிவித்தார்.
“பல இனங்களைச் சேர்ந்த சமூகத்தில் வளர்ந்ததால் பலரை அறிந்தேன். அவர்கள் பின்னர் என் வணிகத்திற்கு ஆதரவளித்தனர்.”

2008 ஆம் ஆண்டில், எந்த பெரிய முதலீடும் இன்றி, பூல் ஆபரேட்டராக தனது பயணத்தை தொடங்கிய நாதன், வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவால், பின்னர் நீச்சல் குளம் கட்டுமானத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இதன் விளைவாக கிரேட் பாத் நிறுவனம் உருவானது.
கோவிட்-19 தொற்றுநோய் காலம், தனது தொழில் வாழ்க்கையின் மிகக் கடினமான கட்டமாக இருந்ததாக நாதன் நினைவுகூருகிறார். செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, நிதி பாதிக்கப்பட்டாலும், அதிகாரிகளின் சிறப்பு அனுமதியுடன் அத்தியாவசிய சேவைகளை நிறுவனம் தொடர்ந்தது.
“நீரை சரியாக சுத்திகரிக்காவிட்டால், அது ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு காரணமாகி டெங்கு நோயை பரப்பும். எங்களுக்குப் ‘வாடிக்கையாளர் பாதுகாப்பே முதன்மை’,” என்று அவர் கூறினார்.
இன்று, 40 பணியாளர்களுடன், SSM மற்றும் CIDB பதிவு பெற்ற நிறுவனமாக கிரேட் பாத் செயல்பட்டு வருகிறது. மேலும், இது வீட்டு மேம்பாட்டு நிறுவனங்கள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் உயர்தர வீட்டு உரிமையாளர்களின் விருப்பமான சேவை நிறுவனமாக விளங்குகிறது.
நாதனின் பார்வையில், உண்மையான வெற்றி என்பது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அல்ல; அவர்களுடன் கட்டியெழுப்பிய நம்பிக்கையில்தான்.
“என் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் இருக்கிறார்கள். இவ்வளவு நீண்ட கால நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்வது எளிதல்ல. அதுவே என் வெற்றி,” என்றார் அவர்.
மேலும், நீச்சல் குளம் துறையில் புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்வதின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்ப நூல்கள் வாங்குதல், சர்வதேச பயிற்சிகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்பது போன்றவற்றின் மூலம் தனது அறிவையும் திறமையையும் மேம்படுத்தி வருகிறார்.
வணிகத்தைத் தாண்டி, கிரேட் பாத் நிறுவனம் சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பண்டிகைகளின் போது உணவுப் பொதிகள் வழங்குதல், விளையாட்டு அணிகளுக்கு ஆதரவு, மற்றும் விலங்கு தத்தெடுப்பு திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
“நாங்கள் வணிகத்தை மட்டுமல்ல, மனிதர்களை உருவாக்குகிறோம். மனிதர்களே எங்கள் வணிகத்தை கட்டியெழுப்புகிறார்கள்,” என்று நாதன் தெரிவித்தார்.
